Thursday 3 January 2019

விபாசனா என்னும் மனதை சுத்தப்படுத்தும் தியானமுறை!

விபாசனா என்னும் மனதை சுத்தப்படுத்தும் தியானமுறை!

விபாசனா என்றால் ஒரு விதமான தியானமுறையாகும். இது மற்ற தியானங்களைப் போல சாதாரண தியானம் கிடையாது.

மற்ற தியானங்கள் எல்லாம் அரைமணி நேரம் அல்லது ஒரு மணிநேரம் என பயிற்சி இருக்கும். ஆனால் விபாசனா என்பது குறைந்தபட்சம் பத்துநாட்களுக்குத் தொடர்ந்து பயிற்சி செய்யவேண்டிய முறையாகும்.
பயிற்சி என்றால் கை, கால்களை மடக்குவது, மூச்சை தம்கட்டி இழுத்து வெளியேற்றுவது கண்களை மூடி கவனித்து பார்ப்பது போன்ற எந்த ஒரு வேலையும் கிடையாது.

பத்துநாட்கள் கண்களை மூடி சும்மா உட்கார்ந்திருப்பதற்குப் பெயர்தான் விபாசனா தியானம்.
ஒஷோ அவர்கள் விபாசனா தியானம் செய்யாதவர்களை தியானம் செய்தேன் என்று கூறினால் ஒப்புக் கொள்ளவே மாட்டார்.

யார் யார் விபாசனா தியானத்தை முடித்திருக்கிறார்களோ அவர்கள் தான் தியானம் செய்தேன் என்று கூற முடியும்.

ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் அழுக்குத் தண்ணீர் இருக்கும் பொழுது அதை சுத்தம் செய்வதற்கு நாம் என்ன முயற்சி எடுத்தாலும் அதைச் சுத்தம் செய்வது கடினம். ஆனால் அதை ஒன்றுமே செய்யாமல் ஆடாமல் அசையாமல் அந்தக் கண்ணாடி பாத்திரத்தை ஒரு மேஜை மீது வைத்துவிட்டால் சில மணி நேரத்திற்கு அந்த கண்ணாடிப் பாத்திரத்தில் உள்ள குப்பைகள் அழுக்குகள் கீழே படிந்துவிடும். மேலே உள்ள தண்ணீர் தூய்மையானதாக இருக்கும்.

அதே போல நமது மனதில் உள்ள டென்சன், கோபம், பயம், கவலை போன்ற அனைத்து விசயங்களும் குப்பைகளைப் போன்றது. நாம் மனதில் உள்ள குப்பைகளை நீக்குவதற்காகக் குச்சியைச் விட்டுக் கிளறும்பொழுது அது மீண்டும் மீண்டும் மேலே வருகிறது. பலவிதமான வித்தியாசமான, எத்தனையோ பயிற்சிகளைச் செய்யும் பொழுதும் அது மீண்டும் மீண்டும் மேலே வந்து கொண்டே இருக்கிறது.
ஆனால் ஒன்றுமே செய்யாமல் அமைதியாக உட்கார்ந்திருக்கும் பொழுது அனைத்தும் அழிந்துவிடுகிறது. அதன் பிறகு அது நம்மை தொந்தரவு செய்வதே கிடையாது.

இவ்வாறு நம் மனதில் உள்ள டென்சன், பயம், கவலை, விரோதம், காழ்ப்புணர்ச்சி போன்ற கெட்ட எண்ணங்களை வேறொடு அழிப்பதற்கான பயிற்சி முறைதான் விபாசனா தியானம்.

இந்த விபாசனா தியானத்தைப்பற்றி ஏற்கனவே புத்தகத்திலும் ஆடியோ, வீடியோ. டிவிடிகளிலும், இணையதளம், யூ டியூப் (https://www.youtube.com/watch?v=T3LduBSyyWw) போன்ற ஊடகங்களிலும் நாம் தெளிவாக விளக்கமாகக் கூறியிருக்கிறோம். எனவே இந்தக் கட்டுரையைப் படிக்கும் ஒவ்வொருவரும் தயவு செய்து விபாசனா குறித்து நான் பேசியவற்றைப் படித்துவிட்டு அல்லது டிவிடிகளில் பார்த்தோ, கேட்டுக் கொண்டோ உடனடியாக விபாசனா பயிற்சிக்குச் சென்றுவாருங்கள்.

உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் இந்த விபாசனா தியான மையங்கள் உள்ளன. இதனை உலகுக்கு அளித்தவர், பர்மாவைச் சேர்ந்த கோயங்கா ஜீ என்பவர் இவர் சமீபத்தில் இயற்கை எய்தினார்.
விபாசனா தியானமாக பத்துநாள் பயிற்சிக்கு எந்த ஒரு கட்டணமும் கிடையாது. பத்துநாட்களும் தங்குமிடம் மூன்று வேளை உணவு ஆகியன இலவசமாகவே உலகம் முழுவதும் உள்ள தியான மையங்களில் அளிப்பதற்கு கோயங்கா ஜீ அவர்கள் ஏற்பாடு செய்துள்ளார்.

புத்த மதத்தில் பல வித தியானங்கள் அனுசரிக்கப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை மதசார்பற்றவையே. அதில் மிகவும் பிரபலமானது விபாசனா தியானம். இந்த தியானம் புத்தரால் நேரடியாக சீடர்களுக்கு சொல்லித்தரப்பட்டது என்ற கருத்து நிலவுகிறது. புத்த மத நூல்களில் ‘பாலி’ மொழியில் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்ட பழமை வாய்ந்த நூல்களில் இந்த தியான முறை காணப்படுகிறது. இந்த தியானம் தற்காலத்தில் உள்நோக்கு தியானம் (Insight Meditation) என்ற பெயராலும் அறியப்படுகிறது. இன்று பல நாடுகளிலும் தியான முகாம்களில் கற்றுத் தரும் இந்த தியானத்தை மிகவும் பிரபலப்படுத்தியவர்களில் முக்கியமானவர்கள் பர்மாவைச் சேர்ந்த எஸ்.என்.கோயன்கா என்றழைக்கப்பட்ட சத்யநாராயண கோயன்காவும், சன்ம்யாய் சயடாவும்.

எஸ்.என்.கோயன்கா இந்த தியானமுறைக்கு அறிமுகப்பட்ட நிகழ்ச்சி சுவாரசியமானது. பர்மாவில் பழங்காலத்தில் குடியேறிய இந்துக் குடும்பத்தைச் சேர்ந்தவர் எஸ்.என்.கோயன்கா. அவர் கிட்டத்தட்ட 25 பள்ளி, கல்லூரி, வணிக அமைப்பு, ஆஸ்பத்திரிகள் ஆகியவற்றின் நிர்வாக உறுப்பினர், காரியதரிசி, தலைவர் பதவிகளை வகித்து வந்தவர். பகவத்கீதை சொற்பொழிவுகளையும் நிகழ்த்தி வந்தவர். இப்படி சமூகத்தில் மிக முக்கிய நபராக இருந்து வந்த அவர் நீண்ட நாட்களாக மைக்ரைன் தலைவலியால் அவதிப்பட்டு வந்தார். நவீன மருத்துவ சிகிச்சைகளால் அதைக் குணப்படுத்த முடியாமல் அவர் தவித்தபோது ஊ பா கின் என்ற பர்மியர் கற்றுக் கொடுத்து வந்த விபாசனா தியானத்திற்கு செல்லுமாறு நண்பர் ஒருவரால் அறிவுறுத்தப்பட்டார். “அவர் சொல்லித் தரும் பத்து நாட்கள் தியான முகாமிற்குச் சென்று அந்த தியானத்தை தொடர்ந்து செய்தால் அந்த தலைவலியை நிரந்தரமாகப் போக்கிக் கொள்ளலாம்” என்று அவர் நண்பர் சொன்னார்.

ஊ பா கின் சன்னியாசியல்ல. குடும்பஸ்தர். அரசாங்கத்தில் சிறியதொரு வேலையில் இருந்தவர். ஆனால் அவரை சென்று பார்த்தவுடனேயே அவர் ஆன்மிகத்தில் உயர் நிலை எட்டியவர் என்பதை கோயன்காவால் உணர முடிந்தது. தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு “என்னுடைய மைக்ரைன் தலைவலியை நீக்க தங்கள் தியான முறையைக் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்” என்று கோயன்கா சொன்னார்.

கோயன்காவின் உயர்பதவிகளால் சிறிதும் பாதிக்கப்படாத் ஊ பா கின் “தங்களுக்கு தியானத்தைக் கற்றுத் தர இயலாது” என்று சொல்லி விட்டார்.

திகைப்புடன் கோயன்கா ஏன் என்று கேட்ட போது “இந்த தியானம் நோயை மட்டும் தீர்க்கும் மருந்தல்ல. மனிதனை வருத்தும் அனைத்திலிருந்தும் விடுதலை பெற்றுத் தரும் ஒரு வாழ்க்கை முறை. இந்தியாவில் இருந்து பெறப்பட்ட, புத்தர் பிரானால் பின்பற்றப்பட்ட இந்த சிறப்பு தியானத்தை வெறும் ஒரு குறிப்பிட்ட நோயை மட்டும் நீக்கும் நோக்கத்தோடு வருபவருக்குச் சொல்லிக் கொடுக்க நான் விரும்பவில்லை” என்று ஊ பா கின் கூறினார். விபாசனா வெறும் பயிற்சிகளை சொல்லித் தரும் தியானம் அல்ல ஒன்றும், சில ஒழுக்க விதிகள், நற்குணங்கள் ஆகியவற்றை உறுதியாகப் பின்பற்றி அத்துடன் இந்த தியானப் பயிற்சிகளை மேற்கொண்டால் மட்டுமே இந்த தியானம் முழுப் பலன் தரும் என்றும் விளக்கினார் ஊ பா கின். “சில பயிற்சிகளால் தியானத்தில் சமாதி நிலை என்னும் மிக உயர்ந்த நிலையைக் கூட அடையலாம். ... ஆனால் அடிமனதைத் தூய்மைப்படுத்தாமல் இந்த தியான உயர்நிலைகளை அடைவது உறங்கும் அரக்கன் மீது அமர்ந்து அந்த உயர்நிலைகளை அடைவது போலத் தான். மேலோட்டமாகப் பார்த்தால் மனதை முழுமையாக வெற்றி கொண்டது போல் தோன்றும். அந்த அரக்கன் விழித்தெழுந்தால் எரிமலை வெடிப்பது போலத் தான். உள்ளே அகற்றாமல் வைத்திருந்த சில குணங்கள் இது வரை சேர்த்து வைத்திருந்த எல்லா முன்னேற்றத்தையும் அழித்து சேதப்படுத்தி விடும்”

(ஆன்மீகத்தில் மிகுந்த முன்னேற்றமடைந்தவர்களாக ஒரு காலத்தில் நினைக்கப்பட்டவர்கள் பற்றி இன்னொரு காலத்தில் மிகக் கேவலமான செய்திகளைக் கேட்க நேர்வது ஏன் என்பதற்கு ஊ பா கின் அன்று சொன்னது தான் பதில். எத்தனையோ சித்திகள் அடைந்திருக்கலாம். ஆனால் அடிப்படையில் ஒழுக்கம் இல்லையானால், ஒழுக்க விதிகள் பின்பற்றப்படவில்லையானால் எல்லாமே வியர்த்தமாகி விடும். பதஞ்சலியின் யோக சூத்திரங்களிலும் ஆரம்பத்தில் யமா, நியமா என்ற ஒழுக்க விதிகள் பற்றி வலியுறுத்தியதை நாம் முன்பே பார்த்தோம். இவர் சொல்வதும் அப்படியே ஒத்து வருகிறது).

அவர் கருத்தில் இருந்த உண்மையை உணர்ந்த கோயன்கா அவர் சொன்னதை ஏற்றுக் கொண்டு முழுமையாக அந்தத் தியானத்தில் முறைப்படி ஈடுபட சம்மதித்தார். அந்த தியானம் கற்ற பிறகு அவர் தலைவலி குணமானது மட்டுமல்லாமல் அவர் வாழ்க்கை முறையிலும் பெரிய மாற்றம் ஏற்பட்டது. பின்னர் அவர் விபாசனா தியானத்தை பிரபலப்படுத்தி அனைவருக்கும் கற்றுத் தர ஆரம்பித்தார்.

நான் கடந்த எட்டு ஆண்டுகளாக வகுப்புகளை இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் நடத்தி வருகிறேன். என்னுடைய வகுப்புகளில் எல்லாம் தவறாமல் இந்த விபாசனா தியானம் கற்றுக் கொள்ளச் செல்லுங்கள் என்று மக்களிடம் வலியுறுத்திக் கூறிவருகிறேன். கட்டணங்களில்லாத இந்தப் பயிற்சியை அனைவரும் கற்றுக் கொள்ளவேண்டும் என வழிகாட்டி வருகிறேன். இதன் மூலம் உலகம் முழுவதும் உள்ள விபாசனா மையங்களுக்கு என்னால் ஆயிரக்கணக்கானோர் சென்று பயனடைந்துள்ளனர். போகும்பொழுது நிம்மதியின்றி, அமைதியின்றி, சந்தோ­மின்றி, தூக்கமின்றி, கவலையுடன் சென்றவர்கள் நிம்மதியாக, அமைதியாக, சந்தோ­மாக ஆரோக்கியமாக நம்பிக்கையுடனும் மிகத் தெளிவுடனும் திரும்பி வருவார்கள்.

இந்த விபாசனாவைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள www.dhamma.org என்ற இணையதளத்தில் தொடர்பு கொள்ளுங்கள் .

இந்த விபாசனா தியானத்திற்கு விளம்பரமாக இதுவரை நோட்டீஸ், விசிட்டிங்கார்டு போன்ற எதையும் யாரும் அச்சடித்து விநியோகம் செய்ததில்லை. டிவி, பேப்பர் போன்ற எதிலும் விளம்பரம் செய்ததும் இல்லை.கோயங்கா ஜீ அவர்கள் நோக்கம் என்னவென்றால் யார் ஒருவருக்குப் பிராப்தம் இருக்கின்றதோ அவர் கண்டிப்பாக விபாசனா தியானத்திற்கு தேடிவருவார் என்று கூறுவார்கள். ஆனால் என்னால் அவரைப்போல் சும்மா இருக்க முடியவில்லை. ஏனென்றால் நான் விபாசனா தியானத்திற்கு சென்றதால் மிகப்பெரிய பலனை அடைந்தேன். நிம்மதியில்லாமல் இருந்த நான் இந்தப் பயிற்சியை செய்த உடன் நிம்மதியான ஒரு மனிதனாக மாறிவிட்டேன்.

"யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என உலக மக்களுக்கு இந்த விபாசனா தியானத்திற்கு செல்லுங்கள் என்று பிரச்சாரம் செய்து கூறிவருகிறேன். இப்பொழுது பல விபாசனா மையங்களில் இருந்து என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிவருகிறார்கள். உலகில் உள்ள பல விபாசனா தியான மையங்களில் இருந்தும் அதன் நிர்வாகத்தினர் நீங்கள் யார்? உங்களின் பெயரைக் கூறி பலபேர் இங்கு வந்து செல்கிறார்கள். நீங்கள் ஏன் இதற்கு எல்லோரிடமும் பிரச்சாரம் செய்கிறீர்கள்? என்று கேட்கிறார்கள். நானும் இதனால் மிகுந்த பலனடைந்துள்ளேன். அதனால் மக்களை அனுப்பிவைக்கிறேன் என்று கூறுகிறேன். அனைத்து விபாசனா தியான மைய நிர்வாகிகளும் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நன்றி கூறிக் கொண்டு இருக்கிறார்கள்.

"நீங்கள் சொன்னதால் இந்த தியானத்திற்கு வந்துள்ளேன்'. என்று கூறுபவர்களே இங்கு வருபவர்களில் 40 முதல் 50 சதவிகித்தினர் என்று என்னிடம் அவர்கள் கூறுகின்றனர். அதே சமயத்தில் ஒரு வித்தியாசமான விசயத்தையும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். அது என்னவென்றால் ஹீலர் பாஸ்கர் ஆகிய நான் அனுப்பி வைத்த அன்பர்கள் பத்து நாட்கள் தியானப் பயிற்சி முடிந்தவுடன் ஒரு பைசா கூட கொடுக்காமல் அதாவது நன்கொடை எதுவும் அளிக்காமல் சென்றுவிடுகிறார்கள் என்று வேடிக்கையாக கூறுகின்றனர்.

அதாவது நான் பொதுமக்களை அந்தப் பயிற்சிக்கு செல்லுங்கள் என்று வலியுறுத்தும் பொழுது அங்கு கட்டணம் எதுவும் கிடையாது. எனவே செல்லுங்கள் என்று ஒரு அக்கரையுடன் கூறுகிறேன். ஆனால் பொதுமக்கள் பலரும் செல்லும் பொழுது பணம் எடுத்துச் செல்வதில்லையாம். எனவே யோசித்துப்பாருங்கள். ஏற்கனவே விபாசனா சென்று வந்தவர்கள் இனிமேல் புதியதாகச் செல்லப் போகிறவர்கள் ஆகியோர் இதைப் புரிந்து கொள்வீர்களாக!

நீங்கள் பத்து நாட்கள் பயிற்சி முடிவில் ஏதேனும் மாற்றத்தை உணர்வீர்கள். அப்படியானால் அவர்களின் பயிற்சிக்கும் உபசரிப்பிற்கும் நாம் பதிலுக்கு எதாவது செய்யவேண்டும் அல்லவா? ஒரு வேளை பயிற்சியின் முடிவில் உங்களுக்கு எவ்வித மாற்றமும் தோன்றாமலிருந்தாலும் பரவாயில்லை. ஆனால் பத்துநாட்கள் ஆசிரமத்தில் நமக்கு தங்குவதற்கும் உணவும் வசதியும் செய்துக் கொடுத்ததற்கு பலனாக நாம் அவர்களுக்கு பொருளாதார உதவி செய்ய வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

ஓசியில் விபாசனா பயிற்சிகள் நடத்தினாலும் நாம் ஓசியாகச் சென்று வருவதைவிட குறைந்தபட்ச நன்கொடையாவது அளிக்கவேண்டும் என்பதை ஒவ்வொருவரும் நினைவில் கொள்ளவேண்டும் என்பதை தாழ்மையுடன் வலியுறுத்துகிறேன்.
வருடத்திற்கு ஒருமுறையாவது அனைவரும் கண்டிப்பாக விபாசனா பயிற்சிக்குச் செல்லவேண்டும்.

ஒரு வருடம் முழுவதும் நடந்த பல விசயங்களில் நமக்கு ஏற்பட்ட டென்சன், கோபம், பயம் ஆகியவற்றை பத்துநாட்கள் பயிற்சியின் மூலம் நீக்கிவிட்டால் நாம் நிம்மதியாக, சந்தோ­மாக, அமைதியாக வாழமுடியும்.

எனவே நாம் நிம்மதியாக வாழ்வதற்கு வருடத்திற்கு ஒருமுறை (பத்துநாட்கள்) விபாசனா தியானப் பயிற்சிக்குச் செல்வதற்கு அனைவரும் முன்வர வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

விபாசனா தியானத்தில் ஐந்து தர்மவிதிகளைப் பின்பற்றும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கீழ்கண்ட உறுதிமொழிகளை விபாசனா தியானம் செய்வோர் எடுத்துக் கொள்கின்றனர்.
1. நான் எந்த உயிரினத்திற்கும் தீங்கு விளைவிக்க மாட்டேன். கொல்ல மாட்டேன்.
2. நான் திருட மாட்டேன்.
3. நான் தவறான உடலுறவுகளில் ஈடுபட மாட்டேன். வாழ்க்கைத் துணையுடன் அல்லாத உடலுறவில் ஈடுபட மாட்டேன்.
4. நான் பொய் பேச மாட்டேன். தீங்கு விளைவிக்கும் பேச்சினையும் பேச மாட்டேன்.
5. நான் புத்தியை மழுங்கச்செய்யும் மது, போதை வஸ்துக்களை உட்கொள்ள மாட்டேன்.
தியானப் பயிற்சிமுகாம்களில் பங்கு பெறும் போது அந்த நாட்களில் பங்கு பெறுவோர் மேலும் மூன்று உறுதி மொழிகள் எடுத்துக் கொள்கின்றனர்.
6. நான் இருட்டிய பிறகு உணவு உட்கொள்ள மாட்டேன்.
7. நான் அலங்காரம், பகட்டு, கேளிக்கைகள் ஆகியவற்றில் ஈடுபட மாட்டேன்.
8. நான் சொகுசான படுக்கை, இருக்கை ஆகியவற்றைப் பயன்படுத்த மாட்டேன்.

மொத்தத்தில் தூய்மை, எளிமை, நேர்மை ஆகியவையே இங்கு வலியுறுத்தப்படுகின்றன. விபாசனா தியான முறையாக மட்டுமல்லாமல் காலப்போக்கில் வாழ்க்கை முறையாக மாற வேண்டிய ஒரு உயர்நிலையாக கருதப்பட்டது. எனவே அந்த தியானமுகாமில் பங்கு பெறும் நாட்களில் இந்த உறுதிமொழிகள் எடுத்துக் கொண்டு பின் பற்றுவது அந்த நெறியான வாழ்க்கைக்கு அறிமுகமாகும் சந்தர்ப்பமாக அமைகிறது.

இனி விபாசனா தியானத்தை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

விபாசனா தியான முறை
****************************

1) மற்ற தியானங்களைப் போலவே விபாசனா தியானத்திற்கும் அதிக குறுக்கீடுகள் இல்லாத அமைதியான இடத்தைத் தேர்ந்தெடுங்கள். சத்தங்களே இருக்கக்கூடாது என்பதல்ல நம்மை அதிகமாக அலைக்கழிப்பது போன்ற சத்தங்கள் இருக்கக் கூடாது என்பது முக்கியம்.

2) உங்களுக்கு வசதியானபடி சம்மணமிட்டோ, பத்மாசனத்திலோ, நாற்காலியிலோ அமருங்கள். நீண்ட நேரம் அமர்கையில் உங்களுக்கு சிரமமாக இருக்கும்படியாக மிக இறுக்கமாக அமராதீர்கள். அதே நேரம் கூன் போட்டோ, விறைப்பாகவோ இல்லாமல் முடிந்த அளவு நேராக நிமிர்ந்து இருங்கள். உதாரணத்திற்கு வயலின் தந்தி மாதிரி இருக்கச் சொல்கிறார்கள். ஒரேயடியாக இறுக்கமாகவோ, தளர்ச்சியாகவோ இல்லாமல் இருக்க வேண்டும் என்கிறார்கள்.

3) உங்கள் வலது உள்ளங்கை இடது உள்ளங்கையின் மீது இருக்கும்படியாக கைகளை திறந்த நிலையில் மடியில் வைத்துக் கொள்ளவும் கைகளை இறுக்கிப் பிடித்துக் கொள்ள வேண்டாம். கண்களை மூடியோ, லேசாகத் திறந்தோ வைத்துக் கொள்ளலாம்.

4) உங்கள் கவனத்தை வயிற்றுப் பகுதியில் வையுங்கள். உங்கள் உள் வாங்கும் மூச்சினால் உங்கள் வயிறு விரிவடைவதையும், வெளி விடும் மூச்சினால் வயிறு குறுகுவதையும் கவனியுங்கள். உங்கள் கவனத்தை அதைத் தவிர வேறெதிலும் வைக்க வேண்டாம். ஆரம்ப நாட்களில் அதை “விரிவடைகிறது”, “குறுகுகிறது” என்று மனதில் பெயரிட்டு கவனத்தை பலப்படுத்தலாம். ஆனால் அதற்கு மேல் உங்கள் மூச்சை அலசப் போக வேண்டாம். ’உள் மூச்சு ஆழமாகிறது” “வெளிமூச்சு முழுமையாக இல்லை” போன்ற விமரிசனங்களுக்குப் போகாதீர்கள்.

5) போகப் போக அந்த பெயரிட்டு அழைப்பதையும் நிறுத்தி வயிர்றின் அசைவுகளை மட்டும் உணர ஆரம்பியுங்கள். இது படிக்க சுலபமாக இருக்கலாம். ஆனால் நடைமுறையில் அவ்வளவு சுலபமில்லை. வேண்டுமானால் உங்கள் கைகளை முன்பு சொன்ன நிலையிலேயே வயிற்றை ஒட்டினாற் போல் வைத்துக் கொள்ளலாம். கைகளாலும் அந்த அசைவுகளை உணர்வது தியானத்தை ஆழப்படுத்த உதவும்.

6) மூச்சை நீங்களாகக் கட்டுப்படுத்த முயலாதீர்கள். அது இயல்பாக இருக்கட்டும். மூச்சினால் ஏற்படும் வயிற்றசைவில் மட்டும் வைக்கையில் நீங்கள் நிகழ்காலத்தில் இருக்கிறீர்கள். அப்போது அடுத்த அசைவைப் பற்றி சிந்திக்காதீர்கள். உதாரணமாக உள்மூச்சின் அசைவில் கவனம் வைக்கையில் வெளிமூச்சின் அசைவைப் பற்றி முன்பே நினைக்க ஆரம்பிக்காதீர்கள். உங்களைப் பொறுத்த வரை அந்த ஒரு கணம் மட்டுமே கவனமிருக்கட்டும். மனம் ஆரம்பத்தில் முரண்டு பிடிக்கும். கடந்த காலத்திலும், எதிர்காலத்திலும் கவனத்தை பெரும்பாலும் சிதற வைக்கும் மனதிற்கு நிகழ்காலம், அதுவும் சுவாரசியம் இல்லாத இந்த மூச்சு ஏற்படுத்தும் அந்த ஒரே அசைவில் கவனம் வைப்பது இமாலயப் பிரயத்தனமாகவே இருக்கும். ஆனால் அவசரமில்லாமல், அலைபாயாமல் அந்த நிகழ்கால கணத்தின் அந்த அசைவில் மட்டுமே மனம் வையுங்கள்.

7) மனம் எத்தனை முறை அலைபாய்ந்தாலும் சலிக்காமல் அதைத் திரும்ப வயிற்றின் அசைவுக்குக் கொண்டு வாருங்கள். இதெல்லாம் நமக்கு சரிப்படாது என்று ஆரம்பத்தில் தோன்றலாம். அது இயற்கையே. ஆனால் எந்தப் புதிய வித்தையும் ஆரம்பத்திலேயே சுலபமாகக் கை கூடாது என்கிற போது அது கைகூடுகிற வரை பொறுமையுடன் பயிற்சி செய்யத் தான் வேண்டும் என்கிற போது இந்த தியானப் பயிற்சியில் ஆரம்பத்திலேயே வெற்றி கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது வீண் அல்லவா?

8 ) சில நாட்கள் இப்படியே இந்த தியானத்தை சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் செய்யுங்கள். பின் அடுத்த கட்டமாக மனம் எப்போதெல்லாம் மூச்சின் அசைவை விட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்துகிறதோ அதன் செயலுக்கு ஒரு பொதுவான பெயரை வைத்து உணர்ந்து திரும்ப மூச்சின் அசைவுக்கே மனதைக் கொண்டு வாருங்கள். உதாரணத்திற்கு கவனம் வெளியே ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்பதிற்கு சென்றால், சுருக்கமாக “சத்தம்” என்று மட்டும் என்று பெயரிடுங்கள். அடுத்த கணம் மீண்டும் மூச்சின் அசைவுக்கு கவனத்தைக் கொண்டு வாருங்கள். மனம் வேறு எதையோ நினைக்கிறது என்று எடுத்துக் கொண்டால் “நினைப்பு” என்று பெயரிட்டு மறுபடியும் மூச்சின் அசைவுக்குக் கொண்டு வாருங்கள். கால்வலிக்கிறது என்று மனம் சொன்னால் “வலி” என்று பெயரிட்டு உடனடியாக கவனத்தை மீண்டும் திருப்புங்கள்.

9) நீங்கள் கவனச் சிதறல்களுக்கு வைக்கும் பெயர் எப்போதும் பொதுவாகவும் ஒரு சொல் அளவாகவே இருக்கும்படி சுருக்கமாகவும் இருக்கட்டும். வேறெதையும் நினைக்கவே கூடாது என்று தீர்மானமாக உட்கார்ந்தால் கண்டிப்பாக தோற்றுப் போவீர்கள். மனம் கட்டுப்பாடுகள் அதிகமாக அதிகமாக முரண்டும் அதிகமாகவே பிடிக்கும். மாறாக ஒவ்வொரு கவனச்சிதறலையும் நீங்கள் அறிந்திருந்து, அதற்கு ஒரு பெயர் வைத்து அங்கீகரித்து, சலிக்காமல் உங்கள் கவனத்தை உடனடியாக மீண்டும் திருப்புவதே பெரிய வெற்றி.

10) கவனம் சிதறுகிறது என்பதை உடனடியாக உணர்வதும், அது எது விஷயமாக என்று பொதுவாக அறிந்திருப்பதும், அது விஷயமாக மேற்கொண்டு சிந்தனையை நீட்டிக்காமல் எங்கு கவனம் வர வேண்டுமோ அங்கு உடனடியாக மனதைக் கொண்டு வர முடிவதுமே தியானத்தில் முதல் பெரிய வெற்றி. கவனச் சிதறல் எதிலோ ஆரம்பித்து அதிலேயே தொடர்ந்து சில நேரம் இருந்து அதை அறியாமலேயே இருப்பது தான் தியானத்தின் எதிர்மாறான நிலை.

11) உட்கார்ந்த நிலை சில நிமிடங்கள் கழித்து அசௌகரியத்தை ஏற்படுத்தினால் தாராளமாக மாறி உட்கார்ந்து கொள்ளுங்கள். ஆனால் அந்த எண்ணம் தோன்றியவுடனேயே “மாற்றம்” என்று பெயரிட்டு அந்த எண்ணத்தை அங்கீகரித்து முழுக் கவனத்துடன் மாறி உட்கார்ந்து மறுபடியும் வயிற்றின் அசைவிற்கு கவனத்தைக் கொண்டு வாருங்கள்.

12) இப்படி இந்த உள்நோக்கு தியானம் உங்கள் கவனம் செல்லுமிடங்களைக் கூர்மையாக அறியச் செய்வதுடன் கவனத்தின் மீது உங்கள் ஆளுமையை வளர்த்த உதவுகிறது.

13) நாளடைவில் தியானத்தில் இருக்காத நேரங்களிலும் உங்களுக்குள் ஏற்படும் உணர்வுகளை அறிந்திருக்க இந்த தியானப் பழக்கம் உதவுகிறது. கோபம் வருகிற போது “கோபம்” என்று பெயரிட்டு அறியும் அளவு விழிப்புணர்வு இருந்தால் கூட மனதிற்கு கவனத்தை அதிலிருந்து வேண்டும் இடத்திற்கு திருப்பவும் எளிதில் முடியும் என்பது அனுபவம்.

விபாசனா என்னும் இந்த உள்நோக்கு தியானம் வாழ்க்கை முறையாக பரிணமிக்கும் போது வாழ்க்கை ஆழப்படுகிறது. அதைப் பற்றி ஒரு புத்தகமே எழுதக் கூடிய அளவு மேலும் பல பயிற்சிகள் இருக்கின்றன

No comments:

Post a Comment

சுவாசம்!

# சுவாசம் ! ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவன் வயது என்ன? ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனு...