Monday 24 December 2018

“பிரம்ம” ரகசியம்

பிரம்மதேவனின் பிறப்பு குறித்த “பிரம்ம” ரகசியம் :அரியதோர் ஆன்மீக தகவல்
பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர்… இந்து தர்ம புராணங்களின்படி முப்பெரும் கடவுளர்களாக வணங்கப்படுகிறார்கள். இவர்களில் படைக்கும் தொழில் கொண்டவர் பிரம்மா; காக்கும் தொழில் கொண்டவர் விஷ்ணு; அழிக்கும் தொழில் கொண்டவர் சிவன் என, இவர்களைப் போற்றி வணங்குகிறது வேதம். பிரம்ம வைவர்த்த புராணம், விஷ்ணு புராணம், சிவ புராணம், ஸ்ரீமத் பாகவதம் ஆகிய புராண நூல்களில் இந்த மூவரின் தோற்றமும், அவர்கள் தத்தமக்குரிய பணிகளை ஏற்ற விவரமும், அவர்களின் பூரண மஹிமையும் சித்திரிக்கப் படுகின்றன.
பன்னெடுங்காலமாக பிரம்மாவை ஆலயங்களில் வழிபடக்கூடாது என்ற சம்பிரதாயம் நடைமுறையில் இருந்து வருகிறது. புண்ணிய பாரதத்தில் ஒன்றிரண்டு கோயில்கள் தவிர, பிரம்மாவுக்கு வேறு ஆலயங்கள் கிடையாது. சிவனுக்குத் தனி வழிபாடு செய்பவர்கள் சைவர்கள் எனப்படுகின்றனர். விஷ்ணுவுக்குத் தனி வழிபாடு செய்பவர்கள் வைணவர்கள் எனப்படுகின்றனர். பிரம்மனை மட்டும் தனி யாக வழிபடும் சம்பிரதாயமோ, பிரிவோ இல்லை. பல ஆலயங்களில் விஷ்ணுவும் சிவனும் சேர்ந்து ஹரிஹர ஸ்வரூபமாகப் பூஜிக்க ப்படுகின்றனர்.
‘ஹரியும் ஹரனும் ஒன்று’ என்ற வாசகம் உண்டு. ஆனால், பிரம்மாவை தனியாகவோ அல்லது மூவருடன் சேர்த்தோ வழிபாடு செய்ய எந்த சம்பிரதாயத்திலும் விளக்கங்கள் இல்லை. முப்பெரும் கடவுளர்களில் ஒருவராகப் பேசப்படும் இந்த பிரம்மா யார்? அவர் எங்கிருந்து தோன்றினார்? அவருக்கு ஏன் தனி வழிபாடு இல்லை? தேவி மஹாத்மியம் என்கிற தேவி புராணத்தில் ஒரு சம்பவம் விளக்கப்ப டுகிறது.
ஒரு யுகத்தில் மஹாப் பிரளயம் தோன்றி அனைத்து உலகங்களையும் நீரில் ஆழ்த்தியது. அதற்குமுன்பு தோற்றுவிக்கப்ப ட்ட எந்த ஜீவ ராசிகளும், தாவர, விலங்கினங்களும் காணப்படவில்லை. பார்க்குமிடமெல்லாம் தண்ணீர். அந்த பிரளய வெள்ளத்தில் ஒரு சிறு ஆலிலை மிதந்து வந்தது. அதன் மேல் பகவான் ஸ்ரீ மஹா விஷ்ணு ஒரு குழந்தை வடிவில் மிதந்து கொண்டிருந்தார்.
‘நான் யார்? என்னைப் படைத்தவர் யார்? எதற்காகப் படைத்தார்?’ என்ற சிந்தனையுடன் ஸ்ரீ மஹாவிஷ்ணு அனந்த நிஷ்டையில் ஆழ்ந்திருந்தார். அப்போது, ஆதிபராசக்தி எனும் மூலசக்தி ‘மஹாதேவி’ என்ற பெயருடன் தோற்றமளித்தாள். சங்கு, சக்கரம், கதை, தாமரை ஆகிய சின்னங்கள் அவள் கரங்களில் ஒளிர்ந்தன. ஆதிபராசக்தியைச் சூழ்ந்து ரதி, பூதி, புத்தி, மதி, கிருதி, த்ருதி, ஸ்ரத்தா, மேதா, ஸ்வேதா, ஸிதா, தந்த்ரா ஆகிய 11 தேவியரும் காட்சி தந்தனர். அப்போது மஹாதேவி அசரீரியாக அருள்வா க்கு தந்தாள்.
மஹாவிஷ்ணுவே! படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய 3 கர்மாக்களும் ஒவ்வொரு யுகத்திலும் பிரதிபலிக்கும். பிரளயம் தோன்றி அவற்றை அழிக்கும்போது, காக்கும் கடவுளான நீ மட்டும் அழியாமல் நிற்பாய். ஆதிசக்தியின் அம்ஸமாகத் திகழும் நீ பிரளயத்து க்கும் ஊழித்தீக்கும் அப்பாற்பட்டு நிலைத்திருப்பாய். சத்வ குணங்களின் பரிமாணமாக நீ திகழ்வாய். உனது நாபியிலிரு ந்து (தொப்புள்) பிரம்மன் தோன்று வான். அவன், ரஜோ குணங்களின் பிரதிநிதியாக இருந்து, பிரளயத்தில் மறைந்த அனைத்தையும் சிருஷ்டி செய்வான்.
அவன் அழியாத பிரம்ம ஞானத்தின் மொத்த உருவமாக இருந்து, மீண்டும் அண்ட சராசரங்களை உருவாக்குவான். அவனது புருவ மத்தியில் ஒரு மாபெரும் சக்தி தோன்றும். அதன் வடிவம் தான் சிவன். அவன், தமோகுண வடிவமாக, ருத்ர மூர்த்தியாக நின்று, ஸம்ஹாரம் எனும் அழிக்கும் தொழிலை ஏற்பான். இப்படி படைத்தல், காத்தல், அழித்தல் எனும் முப்பெரும் கர்மாக் களையும் பிரம்மா, விஷ்ணு, சிவனாகிய நீங்கள் மூவரும் செய்வீர்கள். உங்களின் இயக்க சக்தியாக நானும் என் அம்ஸங்களான தேவி களும் செயலாற்றுவோம்” என்று அருளினாள் தேவி.
தேவி புராணத்தின் ஏழாவது காண்டத்தில், பிரம்மன் தோன்றிய வரலாறு மேற் கண்டவாறு விளக்கப்படுகிறது. விஷ்ணுவின் நாபியிலிருந்து ஒரு தாமரைத் தண்டு வளர ஆரம்பித்தது. பிரளய வெள்ளத்தின் பரப்புகளைத் தாண்டி, அது நீண்டு வளர்ந்தது. அதன் நுனியில் ஒரு பிரமாண்டமான தாமரை மலர் மலர்ந்தது. அதனுள் இருந்து பிரம்மதேவன் தோன்றினார். அப்போது அவருக்கு ஐந்து முகங்கள் இருந்தன. அவற்றில் ஒரு முகம், பின் னர் சிவபெருமானால் அழிக்கப்பட்டது. அதனால் பிரம்மன் ‘நான்முகன்’ என்றழைக்கப்பட்டார். அவருக்கு ‘சதுரானன்’ என்ற பெயரும் உண்டு
ஓம் நமச்சிவாய

No comments:

Post a Comment

சுவாசம்!

# சுவாசம் ! ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவன் வயது என்ன? ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனு...